திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் போதை மாத்திரை மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டாலும் குற்றச் சம்பவங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரூர் பைபாஸ் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை சப் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று போதை மாத்திரைகள் விற்றதாக திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த சிவகுரு என்பவரை கைது செய்தனர். இவர் ரவுடி பட்டியலில் உள்ளார். இதே போல காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாராநல்லூரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது போதை மாத்திரைகள் விற்றதாக வரகனேரியை சேர்ந்த அசன் அலி, முகமது யாசர் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 600 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.