பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மார்த்திப்பாளையம் பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) ஜூன் 28, 30 ம் தேதிகளில் ஈரோடு- கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி – கரூர் இடையே மட்டுமே இயங்கும். இதேபோல திருச்சி-பாலக்காடு ரயிலானது (16843) வருகிற 28, 30-ம் தேதிகளில் பாலக்காடு – கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும் இந்த ரயிலானது கரூர் -பாலக்காடு இடையே முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும். மேலும், பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வருகிற 27, 28, 30-ம் தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். மறுமார்க்கமாக, மயிலாடுதுறை – செங்கோட்டை ரயிலானது (16847) வரும் 29-ம் தேதி மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ரயில் நிலையங்களைத் தவிர்த்து, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி-சார்லபள்ளி கோடைகால சிறப்பு ரயிலானது (07229) வரும் 27-ம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி-ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 28 ம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
விழுப்புரம்- புதுச்சேரி ரயில்கள் ரத்து:
இதேபோல விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரெயில் 4 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரெயில் (வண்டி எண் 66063), புதுச்சேரியில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 66064) ஆகிய 2 ரெயில்களும் 26-06-2025, 27-06-2025 (வியாழன், வெள்ளி) மற்றும் 28, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.மேலும் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் எழும்பூர்-புதுச்சேரி பயணிகள் ரெயில் (வண்டி எண் 66051), வருகிற 29-ந் தேதி மட்டும் வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் சுமார் 60 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.