போலி இணையதளங்கள் மூலம் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்து ஏமாற வேண்டாம்…
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை...
திருச்சி மாநகருக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இவர்கள் வெளியூரில் இருந்து வருவதால், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்ய இணையதளத்தில் தேடுகிறார்கள். இவ்வாறு தேடும்போது, ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் அறைகளை முன்பதிவு செய்து தருவதாக போலியான இணையதளம் மூலம் சமூக வலைதளத்தில் விளம்பரங்கள் வருகின்றன. அதை நம்பி, சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆன்-லைனில் முன்பதிவு செய்ய பணம் செலுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் பணம் பெற்றுக்கொண்டு அறைகளை முன்பதிவு செய்து தராமல் ஏமாற்றுவதாக போலியான இணையதளம் மீது புகார்கள் சமீபகாலமாக பதிவாகி வருகின்றது. போலி இணையதளம் மூலம் ஆன்-லைனில் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அறைகளை வாடகைக்கு முன்பதிவு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதால் திருச்சி மாநகரத்தில் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற போலி விளம்பரங்களை நம்பி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்று கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இதுபோன்று மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும்படியும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.