ஐஐடி, என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஆசையா?- ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு…!
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற வகுப்பினர் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) கலந்து கொள்ள பயிற்சிகள் அளிக்கவுள்ளன. இதில் சேர, பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 65 சதவீதமும், பிற இன மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியானது மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், தாட்கோ இணையதளத்தில் பதிய வேண்டும். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கிப் பயிலலாம். உணவு மற்றும் தங்கும் இடத்துக்கான கட்டணத் தொகை 11 மாதங்களுக்கு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்படும். கடந்தாண்டில் 30 மாணவர்கள் தங்கிப் பயின்றதில் 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஐஐடி, என்ஐடி போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேரத் தகுதி பெற்றுள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜா காலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை, திருச்சி 620 001 என்ற முகவரியில் நேரிலோ, 0431-2463969 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.