சேலத்தில் வருகிற 17ம் தேதி திமுக இளைஞரணி மாநாடு: திருச்சியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி…
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு..
சேலத்தில் வருகிற 17ம் தேதி திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளா் பொறுப்பேற்ற பிறகு நடத்தப்படும் முதல் மாநில மாநாடு இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த மாநாட்டை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்ற நிலையில் தற்போது சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இதேபோல திருச்சி கிழக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் திராவிடப் பண்ணை முத்து தீபக் ஏற்பாட்டில் சைக்கிள் பேரணி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கியது. இதனை திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து அவரும் சைக்கிள் ஓட்டி சென்றார். திருச்சி மாநகராட்சி மண்டலம் 3ன் தலைவரும், கிழக்கு மாநகர திமுக செயலாளருமான மு.மதிவாணன் முன்னிலை வகித்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணி மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று காட்டூரில் உள்ள பெரியார் சிலையை அடைந்தது. பேரணியில், பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், நீலமேகம், தர்மராஜ், மணிவேல், பாபு, ராஜ்முஹம்மது, ஏ.எம்.ஜி.விஜயகுமார், சிவா மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.