திமுகவின் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”2019-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தின் காரணமாக கோவையிலும், சென்னையிலும் இருவர் உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் நினைவு இருக்கலாம் அதன் பிறகு திமுக நிகழ்ச்சிகளில் பேனர் கட்டவுட் கலாச்சாரம் இருக்கவே கூடாது இதனை மீறி வைக்கும் திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று திமுக தலைவர் கடந்த 13-9-2019 அன்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், தற்போது ஒரு சிலர், பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைப்பதாக தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்சி பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைக்கக் கூடாது என்றும் கழகத் தலைவர் ஒப்புதலோடு அறிவிக்கிறேன்.இந்த அறிவுரையை யாரேனும் மீறியதாக தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு வருமேயானால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.முன்னதாக, திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சர்ருமான கே என் நேரு ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, அந்த பொது நிகழ்ச்சி தொடர்பான விளம்பர பதாகையில் அந்த பகுதியைச் சேர்ந்த திமுகவின் மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான திருச்சி சிவா எம்.பியின் பெயர் சேர்க்கப்படாததால் பெரும் கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
