காட்சிகள் மாறுகிறதா? திமுக பொதுக்குழுவில் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்- நன்றி தெரிவித்த பிரேமலதா…!
மதுரையில் இன்று( ஜூன் 1) திமுக பொதுக்குழுகூட்டம் நடைபெறுகிறது.அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பொதுக்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூடவே, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஒரு சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்.நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்.விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக அரசுக்குக் கண்டனம்.இந்தித் திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம்.எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம். துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு “ஓரணியில் தமிழ்நாடு” என உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது என்பன உள்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக தலைவராக இருந்த விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர திமுகவில் ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்ட கல்வியாளர் அணியும், மாற்றுத்திறனாளிகளுக்கான அணியும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.திமுக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த்க்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய தி.மு.க.,வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார். அதிமுகவில் ராஜ்ய சபா சீட் கிடைக்கும் என்று கடைசி வரை எதிர்பார்த்த தேமுதிகவுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், திமுக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்துக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வாஞ்சையோடு பார்க்கப்படுகிறது. 2026ம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் தேமுதிகவுக்கு நிச்சயம் ராஜ்ய சபா சீட் கொடுக்கப்படும் என அதிமுக கூறினாலும் அதை நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை என்பது போல தான் பிரேமலதா விஜயகாந்த் ரியாக்க்ஷன் இருக்கிறது. இதன்மூலம், அ.தி.மு.க.,வின் முடிவில் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பது உறுதியாக தெரிய வருகிறது. இதன் மூலம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் காட்சிகள் மாறலாம், அணிகள் மாறலாம் என்றே அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
Comments are closed.