Rock Fort Times
Online News

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிப்.9 திருச்சி வருகை-பறவைகள் பூங்காவை திறந்து வைக்கிறார்…!

திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வருகிறார்.சென்னையிலிருந்து இன்று(09-02-2025) பிற்பகல் திருச்சிக்கு வரும் அவர், ஆட்சியரகச் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தபின் மாலை 4 மணிக்கு புறப்பட்டு திருச்சி-கரூர் சாலை அய்யாளம்மன் படித்துறை அருகே காவிரிக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவை திறந்து வைக்கிறார். இந்தப் பூங்காவானது ரூ. 13.70 கோடியில் சுமார் 6 ஏக்கரில், 60 ஆயிரம் சதுரடியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் வந்து செல்லும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை அருவிகள், குளங்கள் போன்ற அமைப்புகள் இங்குள்ளன.மேலும், இயற்கைச் சூழ்நிலையில் அரிய வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகளும் இங்கு வளர்க்கப்பட உள்ளன. கூடுதலாக பறவைகள் இனப் பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலைப் பிரதிபலிக்கும் விதமான அமைவிடங்கள், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், பாலங்கள், வரைப்படங்கள் என பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.இந்தப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பூங்காவில் உள்ள அனைத்துச் சிறப்பு அம்சங்களையும் பார்வையிடுகிறார்.பின்னர் புதுக்கோட்டைக்குச் சென்று அங்கு நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி வரும் அவர், இரவு விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்