Rock Fort Times
Online News

அவதூறு வழக்கு: டிஐஜி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்- சீமான் ஆப்சென்ட்…!

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார், திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த
வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சீமான் கடந்த மாதம் 8-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி விஜயா உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் சீமான் 8-ந் தேதி ஆஜரானார். அதேபோல வழக்கை தாக்கல் செய்த டிஐஜி வருண்குமாரும் ஆஜரானார். வழக்கு குறித்த ஆவணங்களை சீமான் தரப்பு வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். அந்த ஆவணங்கள் சீமான் தரப்பில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, வழக்கு விசாரணையை 29-ந்தேதிக்கு அதாவது இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்படி டிஐஜி வருண்குமார், குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல், நீதிபதி விஜயா முன்பு தனது வழக்கறிஞர் முரளிகிருஷ்ணா வுடன் இன்று ஆஜரானார். ஆனால், சீமான் ஆஜராகவில்லை. பின்னர், இந்த வழக்கு மீதான விசாரணையை மே 8-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் சீமான் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதாக டிஐஜி தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். மேலும், ஏப்ரல் 8 – ந் தேதி சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பெரும்பாலான கார்களில் வந்த நாம்தமிழர் கட்சியினர் டிஐஜி காரின் அருகே காரை நிறுத்திவிட்டு, சீமான் வாழ்க என கோசமிட்டும் ராமஜெயம் வழக்கு என்ன ஆச்சு எனக்கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும், இதுதொடர்பாக டிஐஜி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்