நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் நிர்வாகிகள் இருவர் மீது மானநஷ்ட வழக்கு-திருச்சி எஸ்.பி.வருண்குமார்…!
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வருகிறார். திருச்சி எஸ்பி மற்றும் அவரது குடும்பத்தினர் சாதி தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து வருண்குமார் எஸ்.பி., சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்தநிலையில், எஸ்.பி.வருண்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியினர் தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் தொடர்ந்து எக்ஸ் வலைதளங்களில் ஆபாச தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வாறு பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், எக்ஸ் வலைதளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னையும், தனது குடும்பத்தினரையும் ஆபாசமாக திட்டிய 51 பேரின் போலி முகவரிகளை வெளியிட்டுள்ளார். அவை அனைத்தும் போலி கணக்குகள் மூலம் வெளிவந்துள்ளன. தன்னை ஆபாசமாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் இருவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியினரின் ஆபாச பதிவுகள் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் எனவே தற்போது எக்ஸ் தளத்தில் தனது உரையாடல்களை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.