கோவையில் தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடற்கூறாய்வு நிறைவு பெற்றது. கோட்டாட்சியர், தடயவியல் துறையினர் முன்னிலையில் உடற்கூறாய்வு நடைபெற்றது. இதனிடையே, தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலுக்கு தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் அஞ்சலி செலுத்தினார். மேற்கு மண்டல ஐ.ஜி., மாநகர காவல் ஆணையர், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட எஸ்.பி.க்கள் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலுக்கு செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் அஞ்சலி செலுத்தினார். டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல், சொந்த ஊரான தேனிக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், கடந்த சில ஆண்டுகளாகவே டி.ஐ.ஜி. மன அழுத்தத்தில் இருந்தார். காவல்துறையில் உள்ளவர்களுக்கு மனஅழுத்தத்தை போக்க தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. டி.ஐ.ஜி.விஜயகுமாருக்கு குடும்ப சூழலால் மன உளைச்சல் ஏற்படவில்லை. மனைவி, மகள் அன்புடனேயே இருந்தனர்.
டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு பணி சூழலிலும் எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. டிஐஜி விஜயகுமார் ஓசிடி மற்றும் மன அழுத்தத்தில் இருந்தார் என அவரின் மருத்துவர் சொன்னார். மன அழுத்தம் காரணமாகவே விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. டிஐஜி விஜயகுமார் மறைவில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். பணிச்சூழலில் எந்த பிரச்னையும் இல்லாமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் என்று தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.