நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார். இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை என அவரது உறவினர்கள் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று அவரது வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவர், தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி ஏப்ரல் மாதம் 30-ம் தேதியிட்ட கடிதத்தை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியிருந்த நிலையில், தற்போது அவர் எழுதியுள்ள மற்றொரு கடிதமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்கடிதத்தில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு 78 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதேபோல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் 11 லட்சம் ரூபாய் தர வேண்டும். இருவரிடமிருந்தும் மொத்தம் 89 லட்சம் ரூபாய் கண்டிப்பாக வசூலிக்கப்பட வேண்டும்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் இருந்து யார், யார் எவ்வளவு பணம் வாங்கி உள்ளனர் என்பது தொடர்பாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தினர் யாரும் தான் எழுதிய கடிதத்தை வைத்துக்கொண்டு யாரையும் பழி வாங்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் அடிப்படையில் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Comments are closed.