டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அந்தத் தண்ணீர் தஞ்சை மாவட்டம், கல்லணையை வந்தடைந்ததும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 15- ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க தஞ்சாவூருக்கு 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் கல்லணையையும் அவர் திறந்துவைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.இதனிடையே தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே திறக்கப்படவுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறுகையில், திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு வரும் தமிழக முதல்வர் பின்னர் கல்லணையிலிருந்து தண்ணீரை மாலை 4 மணியளவில் திறந்து வைக்கிறார். இதையடுத்து தஞ்சாவூருக்கு வரும் அவர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறார். பின்னர் இரவு தஞ்சாவூரிலேயே தங்கிவிட்டு, திங்கள்கிழமை காலை திருமண விழாவில் பங்கேற்று, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், திருவையாறு தொகுதி எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், தஞ்சை மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Comments are closed.