தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சேலம் மாவட்டத்துக்கு சென்றார். அவருக்கு ஈரோடு- சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மேட்டூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரவு மேட்டூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கினார். இந்நிலையில் இன்று (12-06-2025) காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். தண்ணீரை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி ஆற்றில் பூக்களை தூவினார். இதனையடுத்து 8 கண் மதகுகள் வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலத்திற்கு சென்ற முதல்-அமைச்சர், காலை 11 மணிக்கு சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் ரூ.1,500 கோடியில் நலத்திட்ட உதவிகள், கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரையாற்றுகிறார். விழா முடிந்ததும் சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு மாலை சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதியான இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.அப்படி திறக்கப்படும் தண்ணீர் காவிரி ஆற்றின் வழியாக பாய்ந்தோடுகிறது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 3 நாட்களில் திருச்சி மாவட்டம் கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.