மார்ச் 8ம் தேதி லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம்- ஸ்டூடியோவுக்கு நேரில் சென்று இளையராஜாவை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
“இசைஞானி” என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும், தான் இசையமைத்து ‘வேலியண்ட்’ என பெயரிட்ட சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் 8 ஆம் தேதி அரங்கேற்றம் செய்கிறார். இதன்மூலம், இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்கிற சாதனையை படைக்க உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு நேரில் சென்று அங்கு ராஜாவை சந்தித்து நினைவுப்பரிசை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்து, கொண்டார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட பதிவில், “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது… ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன். அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.