பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் பவித்ரா பாடாலூரில் தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம்தேதி செல் டேப் வாங்கினார். அந்த டேபிற்கு ஒரு ஆண்டு வாரண்டி இருந்தது. இந்நிலையில் டேபின் சார்ஜ் நீண்டநேரம் நிற்காததால், இது குறித்து அவர் டேப் வாங்கிய செல்போன் விற்பனை கடையின் உரிமையாளரை கேட்டபோது, பெரம்பலூர் பூசாரித்தெருவில் உள்ள செல்போன் கடைக்கு சென்று பில்லை காண்பித்து டேப் பழுதை சரிசெய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டடார். இதனைத்தொடர்ந்து பவித்ரா, பூசாரித்தெருவில் உள்ள மொபைல் விற்பனை ஷோரூமில் தனது டேபை கொடுத்து பழுதுநீக்கித்தருமாறு கேட்டதற்கு அந்த நிறுவனத்தினர் பவித்ராவை பலமுறை அலையவிட்டனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த பவித்ரா, இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் பாடாலூர் செல்போன் கடையின் உரிமையாளர், பெரம்பலூர் பூசாரித்தெருவில் உள்ள செல்போன் கடைஉரிமையாளர், பெங்களுருவில் இந்திராநகரில் உள்ள கன்ஸ்யூமர் கேர் எக்சிகியூட்டிவ், யுனைடெட் டெலி லிங்க்ஸ் உரிமையாளர் ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து நிவாரண தொகை பெற்றுத்தர கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர், மனுதாரர் பவித்ராவிற்கு டேப்விற்பனை செய்தவகையில் அதனை பழுதுநீக்கித்தருவதில் சேவை குறைபாடு, அவரை அலையவிட்டு மனஉளைச்சல் ஏற்படுத்தியமைக்கு நிவாரணமாக ரூ.10ஆயிரம் மற்றும் வழக்கு செலவுத்தொகையாக ரூ.5ஆயிரமும் எதிர்மனுதாரர்கள் தனி ஒருவராகவோ அல்லது கூட்டாகவோ 45 நாட்களுக்குள் பவித்ராவிற்கு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் தீர்ப்பு வழங்கிய தேதியில் இருந்து 8 சதவீதம் வட்டியுடன் வழங்கவேண்டும் என உத்திரவிட்டனர்.