த.வெ.க.மாநாட்டுக்கு சென்றபோது உயிரிழந்த திருச்சி நிர்வாகிகள் 2 பேர் உடலுக்கு புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி: விஜய் இரங்கல் தெரிவிக்காததால் உறவினர்கள் ஆவேசம்…!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று( அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் மாநாட்டிற்கு கார், பஸ், வேன் மூலம் சென்றனர். அந்தவகையில் தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் கலைகோவன், இளைஞர் அணி தலைவர் வி.எல்.சீனிவாசன் உள்ளிட்டோரும் காரில் விக்ரவாண்டி சென்று கொண்டிருந்தனர். செல்லும் வழியில் அவர்களுடைய கார் விபத்தில் சிக்கியது. இதில் கலைக்கோவன், சீனிவாசன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது உடலும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இன்று திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. திருச்சி உறையூரில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் உள்ள கலைக்கோவன் இல்லத்தில் அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்தி அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக புஸ்ஸி ஆனந்தை கலைக்கோவனின் உறவினர்கள் முற்றுகையிட்டு உயிரிழந்த நிர்வாகிகளின் இறப்புக்கு மாநாட்டில் விஜய் இரங்கல் தெரிவிக்காதது ஏன்?, இன்று வரை ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிடாதது ஏன்? கலைக்கோவன் சிறு வயது முதலே விஜய் ரசிகராக இருந்தவர். நற்பணி மன்றத்திற்கும், கட்சிக்கும் சிறப்பாக செயலாற்றி உள்ளார். அவர் மாநாட்டிற்கு சென்ற நேரத்தில் உயிரிழந்தார். அதற்கு கூட விஜய் அஞ்சலி செலுத்த வராதது ஏன் என ஆவேசமாக கேட்டு வாக்குவாதம் செய்தனர். அவர்களை தொண்டர்கள் சமாதானப்படுத்தி புஸ்ஸி ஆனந்தை அழைத்து சென்றனர்.
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவரான சீனிவாசன் இல்லத்திற்கு சென்ற புஸ்ஸி ஆனந்த், சீனிவாசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இருவரின் இழப்பு கட்சிக்கு பெரிய இழப்பு. அவர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வர தலைவர் கூறியதையடுத்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளோம். அவர்கள் குடும்பத்தை தமிழக வெற்றி கழகம் பார்த்துக் கொள்ளும் என தெரிவித்தார்.
Comments are closed.