அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்:- மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
மாணவர்கள் பசியோடு கல்வி கற்க கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் முன்னாள் முதலமைச்சர் காமராஜர். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர், அதனை சத்துணவு திட்டமாக மாற்றினார். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவு படுத்த முடிவு செய்த அவர், அதற்கான திட்டத்தை இன்று (ஆகஸ்ட் 26) தொடங்கி வைத்துள்ளார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். பின்னர் அவர் பேசுகையில்,
இங்கே வந்து குழந்தைகளுடன் உணவு சாப்பிட உடன் குழந்தைகள் மாதிரி எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது. நீங்கள் எப்படி இன்றைக்கு முழுவதும் ஆக்டிவாக இருப்பீர்களோ, அது மாதிரி எனக்கு இன்றைக்கு ஆக்டிவான தினம் தான். இன்று மனசுக்கு ரொம்ப நிறைவான நாள். 20 லட்சம் மாணவர்கள் இன்று காலை உணவு சாப்பிடுவதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? பசியும், பிணியும், பகையும் இல்லாத நாடு தான், சிறந்த நாடாக பாராட்டப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. கல்வி அறிவை வழங்குவதாக மட்டும் பள்ளிகள் இருக்க கூடாது. நிறைய குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்று என்னிடம் சொன்னார்கள். இதனை மனதில் வைத்து தான் காலை உணவு திட்டத்தை அறிவித்தேன். காலை உணவு திட்டத்தை நானே நேரில் கண்காணித்து வருகிறேன். ஆண்டு ஒன்றுக்கு ரூ.600 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இது செலவு என்று சொல்லமாட்டேன். சூப்பரான சோஷியல் இன்வெஸ்ட்மென்ட். எதிர்காலத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தமிழ் சமுதாயத்திற்கு தர போகிற முதலீடு இது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசி காரணமாக சோர்வாக இருக்க மாட்டார்கள். காலை உணவு திட்டம் தொடங்கியதில் இருந்து நேரடியாக கண்காணித்து வருகிறேன். மாநில திட்டக்குழு மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பசி இல்லாத நிலை. அரசு பள்ளிகளில் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரித்து உள்ளது. மருத்துவமனைக்கு போவது குறைந்து இருக்கிறது. காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. கற்றல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக நாம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என்பது நமக்கு எல்லாம் பெருமை. மாணவர்கள் நல்லா சாப்பிடுங்கள், நல்லா படிங்கள், வாழ்க்கை நன்றாக இருக்கும். நீங்கள் தான் எங்களுக்கு எல்லாமே. குழந்தைகளுக்கு ஆல் தி பெஸ்ட். இவ்வாறு அவர் பேசினார்.
Comments are closed.