பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த கணேசன், ஜூலி தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். கணேசன் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மூத்த மகன் ரோஹித் ராஜ் 9ம் வகுப்பு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் பூக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். தற்போது வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு இந்திரா நகரில் இருந்து அங்காளம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள சமுதாய கழிவறையில் இருந்து ரோஹித்ராஜ் உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் தன்னை காப்பாற்றுமாறு தலை தெறிக்க வெளியே மெயின் ரோட்டுக்கு செல்வதற்காக ஓடி வந்துள்ளர். ஆனால் சிறிது தூரத்திலேயே சாலையில் சரிந்து கீழே விழுந்த ரோஹித் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெரம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல்துறை சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையில், காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். இதையடுத்து ரோஹித்ராஜின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்துக்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சமுதாய கழிவறையில் மதுபாட்டில்கள் நொறுங்கியும், அதனைச்சுற்றி ரத்தக்கரையும் இருந்தது. இதனால் மர்மகும்பல் ரோஹித்ராஜை அழைத்துச்சென்று மது அருந்திவிட்டு, காலி பாட்டில்கள் உள்ளிட்டவையால் குத்திவிட்டு தப்பியிருக்கலாம் என்றும், இதில் பலத்த காயமடைந்த ரோஹித்ராஜ் உயிரிழந்திருக்கலாம் என்பது தங்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.