திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் எனவும் கடந்த 2ந்தேதி மர்ம ஆசாமி ஒருவர் திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பேசி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு காவல் கட்டுப்பாட்டு அறை போலீசார் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, கோவிலில் வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பதும், அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இருந்தாலும்
போலீசார் வழக்குப் பதிந்து கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட செல்போன் எண்ணை கண்டறிந்து அதனை வைத்து, கோவிலுக்கு மிரட்டல் விடுத்த வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திம்மம்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீரங்கம் பகுதியில் தங்கி ஆட்டோ ஓட்டி வருவதாகவும், அவருக்கும், ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சம்பவத்தன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.

Comments are closed.