திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருப்பவர் கே.ஜெயகர்ணா. மிகப் பிரபலமான தொழிலதிபர். இவருக்கு நேற்று இரவு ஃபோன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் திருச்சி மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹூண்டாய் கார், ராயல் என்ஃபீல்டு புல்லட், சுசுகி மோட்டார் சைக்கிள் மற்றும் ஐபோன் ஆகிய நிறுவனங்களின் டீலரான ஆக்சினா குழுமத்தின் தலைவர் கே ஜெயகர்ணா. இவருக்கு திருச்சி தில்லைநகரில் ஆக்ஸினா என்க்ளேவ் என்கிற பெயரில் ஒரு நட்சத்திர ஹோட்டலும் உள்ளது. மேலும் கட்டுமான நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் அண்ணாமலையுடன் மிக நெருக்கமாக உள்ள கே.ஜெயகர்ணாவுக்கு நேற்று இரவு எட்டு மணி சுமாருக்கு போன் செய்த முஹம்மது அஷ்ரப் என்ற நபர், “பாரதிய ஜனதா கட்சியில் நீ சிறப்பாக செயல்படுகிறாய். உன்னை ‘முடிக்க’ சொல்லி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துவிட்டது. உனது கடைசி ஆசை என்ன ? அந்தகடைசி ஆசையை நிறைவேற்றிக் கொள். நீ மிக விரைவில் கொலை செய்யப்படுவாய்” எனக் கூறி போனை துண்டித்து விட்டார்.
இது குறித்து தகவல் தெரிந்த பாரதிய ஜனதா கட்சியினர் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையிலான அக்கட்சியினர், நேற்று இரவே உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து புகார் மனு விசாரிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகர காவல் துறை ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதில் பல்வேறு தொழில்கள் செய்து மலைக்கோட்டை மாநகரில் வெற்றிபெற்றவர்களில் கே.ஜெயகர்ணாவும் ஒருவர். அனைவரிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகும் இயல்பு கொண்ட இவர், எந்த வம்பு தும்புக்கும் செல்லாதவர் என நற்பெயரெடுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.