ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் ,போட்டிகளில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மேடையில் நடனமாடி அசத்தினர்.
உலக ஆட்டிச தினத்தை முன்னிட்டு கோவையில் ஆட்டிசம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி, சரவணம்பட்டி குமரகுரு கல்லூரி அரங்கில் நடந்தது. இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளிட்ட பள்ளி மாணவ,மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள், ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
இதில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் போட்டிகளில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அசத்தினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கௌமார மடாலயம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர் சங்கர் வானவராயர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளியின் நிறுவனர் தீபா மோகன் ராஜ், ஆட்டிசம் குழந்தைகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் அவர்களை எப்படி நாங்கள் பாதுகாக்கிறோம் என்பது குறித்து செய்தியாளர்களிடம் கூறினார் . விழாவில் சிறப்பு குழந்தைகள் பாடல் இசையுடன் ஆடி பாடி கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். சிறப்பு குழந்தைகளை கைகளை தட்டி பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகபடுத்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .