திருச்சி, சமயபுரத்தில் கேட்பாரற்று கிடந்த ஆப்பிள் ஐ- போன் – கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் ! நேர்மைக்கு பாராட்டு குவிகிறது! (வீடியோ இணைப்பு)
சக்தி தலங்களில் முதன்மையானதும், பிரசித்தி பெற்றதுமான திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து .சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த சேரன் தனது நண்பர்களுடன் நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்ய வந்துள்ளார். இந்நிலையில் தரிசனத்தை முடித்துவிட்டு கோவில் வளாகத்தில் பிரசாதம் சாப்பிட்டபோது செல்போனை கீழே மறந்து வைத்து சென்றுள்ளார். இதையடுத்து கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நொச்சியத்தை அடுத்துள்ள துடையூர் பகுதியை சேர்ந்த கண்ணகி என்பவர் செல்போன் கிடப்பதை கண்டு அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார். பின்னர் அந்த செல்போனை கோயில் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். விலை உயர்ந்த செல்போன் என்பதால் இணை ஆணையர் பிரகாஷ் ஸ்பீக்கர் மூலம் செல்போன் பற்றிய தகவல்களை கூறியுள்ளார். இதையடுத்து செல்போனை தவறவிட்ட சேரன் கோயில் நிர்வாக அலுவலகம் சென்று தனது செல்போனை வாங்கிக் கொண்டார். பிறர் பொருளுக்கு ஆசைப்படாத துப்புரவு பணியாளர் கண்ணகியின் செயல் கோயில் இணை ஆணையர் மற்றும் நிர்வாகத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.