நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை தோல்வி ; மொட்டை அடித்த பாஜக நிர்வாகியிடம் வனத்துறை விசாரணை காரணம் இதுதான்?…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடன்குடி ஒன்றிய பாஜக மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு செயலாளராக ஜெய்சங்கர் என்பவர் இருந்து வருகிறார். இவர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என அந்த பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதிமுக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு அவர்கள் அப்படி வெற்றி பெறவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என ஜெய்சங்கரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார், வெற்றி பெறவில்லை என்றால் பரமன் குறிச்சி பஜாரில் வைத்து மொட்டை அடித்து பஜார் பகுதியில் வலம் வருகிறேன் என சவால் விட்டுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவினார்.
இதையடுத்து மாற்று கட்சி நண்பரிடம் சவால் விட்டு இருந்த ஜெய்சங்கர் பரமன்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டை அடித்துக் கொண்டு பஜாரை வலம் வந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஜெய்சங்கரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியில் புலி நகம் மாட்டியிருப்பது போன்று தெரிந்தது. இதையடுத்து அவரை அழைத்து வனத்துறை விசாரித்தது. விசாரணையின் முடிவில் பாஜக நிர்வாகி ஜெய்சங்கர் கழுத்தில் அணிந்திருந்தது 10 வருடங்களுக்கு முன்பு திருச்செந்தூர் பஜாரில் வாங்கியது என தெரிய வரவே வனத்துறை நடத்திய விசாரணை புஸ்ஸென ஆனது
Comments are closed.