பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை மூன்றாவது கட்டமாக “என் மண் என் மக்கள்” யாத்திரையை கடந்த 3 ந்தேதி கரூரில் இருந்து தொடங்கினார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர், திருச்சியில் இரவு தங்கி விட்டு 5- ந்தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து 6-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடை பயணம் மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருவனைக்கோவில் நான்கு கால் மண்டபத்தில் இருந்து நடைபயணத்தை இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறார். பிறகு
திருவானைக்காவல் தெப்பக்குளம், மேம்பாலம், தேவி தியேட்டர், ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம், கோவில் ராஜகோபுரம் அருகே நடைப்பயணத்தை முடிக்கிறார். ராஜகோபுரம் அருகில் திரண்டு இருக்கும் மக்கள் மத்தியில் அண்ணாமலை சிறப்புரை ஆற்றுகிறார். இதைத்தொடர்ந்து திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணி முதல் நடை பயணம் மேற்கொள்கிறார். திருவெறும்பூர்
வ.உ.சி.நகரில் இருந்து தொடங்கி அம்பேத்கர் நகர், பாரதிதாசன் தெரு, புத்தர் தெரு, அக்பர் சாலை வழியாக அண்ணா வளைவில் நடைப்பயணத்தை முடிக்கிறார். பிறகு அங்கு மக்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றுகிறார்.நடைபயணத்திற்கு முன்னதாக பாஜக தலைவர் அண்ணாமலை, தான் தங்கி இருக்கும் தனியார் ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். மேலும், அண்ணாமலையை பல்வேறு அமைப்பினர், சங்கத்தினர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். நாளை ( 08.011.2023 ) திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அண்ணாமலை நடைபயணம் மேற் கொள்கிறார். திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட நாச்சியார் கோவிலில் நடைபயணத்தை தொடங்கி உறையூர் பஜார், கே.டி.தியேட்டர் ஆகிய இடங்களில் நடைபயணம் மேற்கொள்கிறார். பிறகு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரிஸ் தியேட்டர் மேம்பாலம், மலைக்கோட்டை வளைவு, தேவர் ஹால், எம்ஜிஆர் சிலை வழியாக காந்தி மார்க்கெட்டில் நடைபயணத்தை முடிக்கிறார். அங்கு பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை சிறப்புரையாற்றுகிறார். திருச்சியில்
அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் மற்றும் கட்சி கொடிகள் சாலையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.