பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நடந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க கட்சியில் சரியாக செயல்படாதவர்களையும், டாக்டர் அன்புமணியின் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். இந்தநிலையில், திருவள்ளூர் மணவாள நகரில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா, மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், திருவள்ளூரில் முப்போகம் விளையும் 1,200 ஏக்கர் நிலத்தை பறித்து அமெரிக்க நிறுவனத்திற்கு தாரை வார்க்க திமுக அரசு துடிக்கிறது. திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது. சமூகநீதிக்காக பாமகவை தொடங்கிய ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். சமூகநீதி பற்றி பேச முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை. சமூகநீதியின் துரோகி திமுக. 2026ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும். தமிழகத்தை ஆள தகுதியான ஒரே கட்சி பாமக. ராமதாசுக்கு தந்தையர் தின வாழ்த்துகள். என் மீது ஏதும் கோபம் இருந்தால் ஐயா ராமதாஸ் என்னை மன்னித்து விடுங்கள். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவறல்ல. நீங்கள் உருவாக்கிய கட்சி இது. கடினமான காலங்களை கடந்து வந்துள்ளீர்கள். என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள். மகனாக நான் செய்கிறேன். என்று பேசினார்.
Comments are closed.