திருச்சி விமான நிலையத்தில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
48 சதவீதம் விவசாய நிலம் இருந்த தமிழ்நாட்டில் அது தற்போது 38 சதவீதமாக குறைந்து விட்டது. கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த இரு கட்சிகள் பாசன வசதிக்கு எந்த திட்டமும் கொண்டு வராததே இதற்கு காரணமாகும். காலநிலை மாற்றத்தால் நாம் பெரிய நெருக்கடியில் உள்ளோம். கர்நாடகாவில், காவிரியின் குறுக்கே அணை கட்ட முயல்வது இரு மாநில நல் உறவை கெடுக்கும். நீர் பங்கீட்டில் நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகா அரசு கடை பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மது விற்பனை கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடி ரூபாய். இந்த ஆண்டு 45 ஆயிரம் கோடி ரூபாய். முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டாலும் மது விற்பனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கஞ்சா விற்பனையும் அதிகரித்து வருகிறது. கூலிப்படை கலாச்சாரத்தை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும். மது விற்பனையால் இளைய தலைமுறை அழிந்து வருகிறது. தமிழக முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கூறுவதை தான் ஆளுநர் கேட்க வேண்டும். அதில் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டலாமே தவிர வேறு எதுவும் அவர் பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.