ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமாராவ் மகன் துன்னாமகேஷ்(21). இவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். துன்னாமகேஷ் தனது செல்போன் மூலம் ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் பல்வேறு விளையாட்டுகளை கடன் வாங்கி விளையாடியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்ததுடன் அவ்வப்போது நண்பர்களிடம் இதுகுறித்து பேசி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு சென்ற துன்னாமகேஷ் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் எடுத்து கூறி கடன் தொகையை திருப்பி கொடுத்துள்ளார். இருப்பினும் பணத்தை இழந்த வேதனையில் இருந்த துன்னா மகேஷ் தனது நண்பர்கள் வாடகைக்கு தங்கி இருக்கும் விடுதி அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை கல்லூரி முடிந்து அறைக்கு வந்து பார்த்த நண்பர்கள், தங்களது நண்பர் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.