திருச்சி மற்றும் துறையூரில் உள்ள கோவில்களின் பூட்டை உடைத்து அம்மன் தாலி, பணம் திருட்டு (வீடியோ இணைப்பு)
திருச்சி, டிவிஎஸ் டோல்கேட் பகுதி உஸ்மான் அலி தெருவில் சங்கிலி முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று 11-01-2025 வழக்கம்போல் இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோவில் அர்ச்சகர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று அதிகாலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர் கோவிலின் பின்புற கேட் மற்றும் மூலஸ்தான கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மூலஸ்தானத்தில் சென்று பார்த்து போது மூலவர் அம்மன் மற்றும் உற்சவர் சிலைகளில் இருந்த தாலி திருட்டுப் போயிருந்தது. உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலுள்ள காணிக்கை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து கோவில் அர்ச்சகர் கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் உதவி ஆணையர் யாசின்பானு, இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், வீரசோலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அம்மன் கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி திருட்டுப் போனது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்கள் மர்ம நபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர். கோவிலில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் சரிவர இயங்காததால் மர்ம நபர்களின் உருவங்கள் தெளிவாக தெரியவில்லை. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வெங்கடேசபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் குணா என்பவர் அர்ச்சகராக உள்ளார். வழக்கம்போல் நேற்று இரவு 9 மணி அளவில் பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று கோவிலை திறப்பதற்காக வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க தாலி மற்றும் உண்டியல் ஆகியவை திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது. இந்த திருட்டில் ஈடுபட்ட நபர்கள் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெங்கடேசபுரம் காட்டுப்பகுதியில் உண்டியலை தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர். மேலும், இதே கிராமத்தில் உள்ள பாலமாரியம்மன் கோவிலிலும் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு கிராம் தங்கத் தாலியை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதற்கு முன்னதாக கலிங்கமுடையான் பட்டி, மெய்யம்பட்டி வி.எ.சமுத்திரம் ஆகிய பகுதியில் உள்ள கோவில்களில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து நான்கு கிராமங்களில் உள்ள கோவில்களில் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் உண்டியல் பணம் திருட்டுப் போன சம்பவம் துறையூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது
Comments are closed.