பள்ளி மாணவனை அடித்ததாக புகார்: தலைமை ஆசிரியர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…!( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், முசிறி பாப்பாபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் முசிறி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஜடமங்கலத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். அந்த மாணவன் கடந்த 22.11.2024 -ந் தேதி வகுப்பறையை துடைப்பத்தால் சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது தவறுதலாக துடைப்ப குச்சிகள் கட்டில் இருந்து நழுவி தவறுதலாக மாடியில் இருந்து கீழே நிறுத்தி இருந்த தலைமையாசிரியரின் கார் மீது விழுந்துள்ளது. அவ்வழியே சென்ற பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் (60) கார் மீது துடைப்ப குச்சிகள் விழுவதை பார்த்து உள்ளார். இதையடுத்து மாடியில் உள்ள வகுப்பறைக்கு வந்து துடைப்பக் குச்சியை கார் மீது போட்டது யார் என கேட்டு விசாரித்துள்ளார். மாணவன் ஜெகன் தவறுதலாக மாடியில் இருந்து துடைப்ப குச்சிகள் கீழே விழுந்ததாக கூறியுள்ளார். சிறுவனின் பதிலில் திருப்தி அடையாத சந்திரமோகன் மாணவன் ஜெகனை அடித்ததாக கூறப்படுகிறது. இதில், மாணவன் ஜெகனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து மாணவன் பெற்றோருக்கு அளித்த தகவலின் பேரில் பள்ளிக்கு வந்த பெற்றோர் மாணவனை தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவன் சிகிச்சை பெற்றார். அதனை தொடர்ந்து மாணவனின் தந்தை செல்வராஜ், பள்ளி தலைமையாசிரியர் மீது தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் 296 (B), 118 (1), 351 (2), 75 உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமையாசிரியர் சந்திரமோகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.