திருச்சி, திருவானைக்காவல் அழகிரிபுரம் அருகே உள்ள எயூடி நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 45). இவர் சமயபுரம் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 19) திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் மது அருந்தி விட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்து தந்தை சோமசுந்தரம் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதை சோமசுந்தரம் தட்டிக் கேட்கவே தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் மரக்கட்டையை எடுத்து சோமசுந்தரத்தை தலையில் ஓங்கி அடித்தார். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த அவரை உறவினர்கள் மற்றும் அருகில் உள்ளவர்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை குறித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர். மதுபோதையில் மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.