தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் கூட்டத்தொடருக்காக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. பட்ஜெட் வாசிக்க தொடங்கும் முன்னரே சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச அனுமதி கோரி அதிமுகவினர் முழக்கமிட்டனர். ஆனால் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அதுவரை அதிமுகவினர் அமைதிக்காக்கும்படியும் சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.
பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தலுக்கு செவி சாய்க்காமல் தமிழக பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாகநிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்துக் கொண்டிருந்தபோது தொடர்ந்து அதிமுகவினர் கூச்சலிட்டுஅமளியில் ஈடுபட்டனர் அமைதியாக உட்கார சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார். ஆனால் அதை அதிமுக எம்எல்ஏக்கள் பொருட்படுத்தவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூச்சல் அதிகமானது. அமைச்சர் வாசித்த பட்ஜெட் உரையை தவிர்த்து அவைக்குறிப்பில் ஏற்றப்படாது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அமளிக்கு மத்தியில் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தார்
