திருச்சி சிந்தாமணி பகுதியில் அதிமுக தெற்கு புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் மற்றும் புறநகர் மாவட்டம் செயலாளர் பரஞ்ஜோதி, மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் பேசுகையில்; கடந்த பதினோராம் தேதி முன்னாள் முதல்வர் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமான மூலம் மதுரைக்கு வருகிறார். விமானத்தில் இருந்து விமான நிலைய பேருந்து மூலம் வெளியே வரும்போது தன்னைத்தானே மிகப்பெரிய 420 என்று அழைத்துக் கொள்ளக்கூடிய அமுமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் சின்ன 420 ராஜேஷ் என்பவர் அந்த விமானத்தில் பயணம் செய்தபோது, எடப்பாடியாரை பார்த்து அசிங்கமாக பேசி கலவரத்தை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டார். அப்போது ராஜேஷ் என்பவரை பார்த்து எடப்பாடியும், எடப்பாடியின் உதவியாளரும் முணுமுணுத்ததற்கே ராஜேஷ் கொடுத்த பொய்ப் புகாரில் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் முதல்வர் எடப்பாடி மீது ஐந்து பிரிவுகளில் 10 வருடம் தண்டனை கிடைக்கும் அளவிற்கு பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. கண்ணிருந்தும் குருடனாய், காத்திருந்தும் செவிடனாய், வாய் இருந்தும் ஊமையாய் இருக்கும் இந்த காவல்துறையை என்ன சொல்வது. ஒரு முணுமுணுத்ததற்கே பத்து வருட தண்டனை கொடுக்கும் அளவிற்கான வழக்குகளை பதிவிட்ட காவல்துறையை பார்த்து கேட்கிறேன், இங்கே வாரந்தோறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய அமைச்சர் கே என் நேரு தொண்டர்களை பார்த்து ஏக வசனத்தில் பேசுவதும், தலையில் அடிப்பதும் போன்ற செயல்களை செய்து வரும் அமைச்சர் நேரு மீது என்னென்ன வழக்குகள் பதிவு செய்தீர்கள்? காவல்துறையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்தும் இந்த வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த போராட்டம் ஒரு அடையாள போராட்டம் தான் வழக்கை திரும்ப பெரும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அதிமுகவினர் தெரிவித்தனர்..

Next Post