திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை முகவர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்,
திமுக கூட்டணியை முதலமைச்சர் சிறப்பாக அரவணைத்து செல்கிறார். ஆனால் எதிரே சேர்ந்துள்ள கூட்டணியை பொருத்தவரை அமித்ஷா முதலில் தனி அமைச்சரவை என கூறி விட்டு சென்றார். பின் மதுரைக்கு வந்த போது கூட்டணி ஆட்சி என்கிறார். இதனால் அ.தி.மு.க தொண்டர்கள் சோர்வடைந்து விட்டனர். முருகன் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் பெரியார், அண்ணா இழிவுப்படுத்தப்பட்டார்கள். இதற்கு திமுக கண்டனம் தெரிவித்த பிறகு அதிமுகவினரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.நம் கூட்டணி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் கூட்டணியாக உள்ளது. ஆனால் அவர்கள் கூட்டணி பொருந்தாத கூட்டணியாக உள்ளது. அவர்கள் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்று பேசினார். கூட்டத்தில் மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன், தொகுதி பார்வையாளர்கள் கதிரவன், மணிராஜ், மருத்துவர் அண்ணாமலை, தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், கே என் சேகரன், சபியுல்லா, மாநில நிர்வாகி செந்தில் மற்றும் பாக முகவர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பஞ்சப்பூர் பேருந்து முனையம்:
அதனைத்தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுகவில் உறுப்பினர்களை சேர்ப்பது, தேர்தல் பணியாற்றுவது குறித்து பாக நிலை முகவர்களுக்கு எடுத்து கூறினோம். அடுத்த மாதம் ஜூலை 15ம் தேதிக்குள் பஞ்சப்பூர் பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். எங்கள் கூட்டணியில் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள்ளாக தான் பிரச்சனை இருந்து வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார். பவன் கல்யாண் ஆந்திராவில் நிலவும் பிரச்சனைகளை பார்க்கட்டும். அவர் தமிழ்நாட்டிற்கு வந்து கருத்து கூற வேண்டாம். மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேச கூடாது என்றார்.
Comments are closed.