Rock Fort Times
Online News

ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று பெற்றோரிடம் அறிவுறுத்துங்கள்..

மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஏற்கனவே பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். தற்போது தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கல்வி விருது, ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று ( 17.06.2023 ) நடைபெற்றது. இதில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையினை விஜய் வழங்கினார். பின்னர் விழா மேடையில் அவர் பேசியதாவது:-

வழக்கமாக நான் பட விழாக்களில் அதிகம் பேசி உள்ளேன். ஆனால், முதல் முறையாக இது போன்ற ஒரு நிகழ்வில் பேசுகிறேன். ஏதோ ஒரு பொறுப்புணர்ச்சி வந்தது போல உணர்கிறேன். ‘உன்னில் என்னைக் காண்கிறேன்’ என்ற சொல்லடை எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. உங்களில் நான் என்னைப் பார்க்கிறேன். எனது பள்ளி நாட்கள் என் கண் முன் வந்து போகிறது. நான் படிப்பில் சராசரி மாணவன் தான்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யக் காரணமே சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம் தான். ‘காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது’. அது தான் அந்த வசனம். இது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தம். அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதற்கு எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்கான நேரம் தான் இது. ஆசிரியர்கள், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக்குப் போவது, கல்லூரிக்கு போவது, பட்டம் பெறுவது மட்டும் முழுமையான கல்வி அல்ல. கடைசி நேரத்தில் எது ஞாபகத்தில் உள்ளதோ அது தான் கல்வி என விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியுள்ளார். முதலில் எனக்கு அது புரியவில்லை. போகபோகதான் புரிந்தது. நாம் கற்கும் கல்வியை கடந்து நம்மிடம் எஞ்சி இருப்பது நமது குணமும், சிந்திக்கும் திறனும் தான். இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் முழுமையான கல்வி அறிவை பெற முடியும். நம்முடைய வாழ்க்கை நம் கையில தான் இருக்கிறது. நிறைய படிங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய மற்றும் நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்வு செய்யப் போகிறீர்கள். நமது விரலை வைத்து நமது கண்ணையே சிலர் குத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் எதைச் சொல்ல வருகிறேன் என்றால் காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பது.
ஓட்டுக்கு காசு கொடுக்கும் அரசியலில் போட்டியிடும் நபர் குறித்து யோசித்துப் பாருங்கள். உங்கள் அப்பா, அம்மாவிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் எனச் சொல்லுங்கள். இது நடந்தால் உங்கள் கல்வி முறை முழுமை அடையும் என நான் நினைக்கிறேன். தோல்வி அடைந்த மாணவர்களுக்கு நீங்கள் ஊக்கம் கொடுங்கள். நீங்கள் நினைப்பதை முன்னெடுத்து செய்யுங்கள். முடியாது எனச் சொல்வார்கள். அதை கண்டு கொள்ளாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்