சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்தாலே விபத்து நேரிடாது – திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி
35வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, பள்ளி- கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது , மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பேசுகையில், திருச்சி மாநகரத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சி மாநகரில் கடந்த ஆண்டு 158 விபத்துக்கள் ஏற்பட்டன. அதில் 165 பேர் உயிரிழந்துள்ளார்கள். 2022ம் ஆண்டைக் காட்டிலும் 2023ம் ஆண்டு 10 சதவீதம் அதிகமாக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதன் காரணமாக அதிக விபத்து ஏற்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்தாலே போதும், விபத்துகளை தவிர்த்து விடலாம் என்று கூறினார். நிகழ்ச்சியில் திருச்சி மாநகர போலீஸ் அதிகாரிகள் மற்றும் கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
போக்குவரத்து வார விழாவை முன்னிட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு பரிசு மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.