Rock Fort Times
Online News

சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி….

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். நியாயம் கிடைக்கும் என வந்த தன்னை சிலர் பயன்படுத்திக் கொண்டதாகவும், இவ்விவகாரத்தில் யாரிடமும் பணம் வாங்கவில்லை எனவும், தான் பெங்களூருவுக்கே மீண்டும் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் ரூ.95 லட்சம் பணம் மற்றும் நகைகளை அபகரித்துவிட்டதாகவும் விஜயலட்சுமி தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 1ம் தேதி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். சீமான் தன்னை 7 முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாக விஜயலட்சுமி புகார் அளித்து இருந்த நிலையில், அதன் உண்மை தன்மையை அறிய கடந்த 7ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. சீமான் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். மேலும் “யாரும் தன்னை கட்டாயபடுத்தியோ, மிரட்டியோ இந்த வழக்கை நான் வாபஸ் பெறவில்லை, சீமானிடம் இது குறித்து பேசினேன், இந்த வழக்கை தான் தொடர்வதாக இல்லை, தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது” என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்