தமிழ்நாடு காங்கிரசுக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துகள் உள்ளன. அவற்றின் மூலம் வாடகையாக கட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் வருகிறது. ஆனால், பல சொத்துக்கள் யாரிடம் இருக்கிறது என்றே தெரியவில்லை. சில சொத்துக்கள் தனியாருக்கு விற்கப்பட்டும் உள்ளது. இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கடந்த 2017-ம் ஆண்டு முதல், காங்கிரஸ் சொத்து மீட்புக் குழுவை தேசிய அளவில் நியமித்து, காங்கிரஸின் பூர்வீக சொத்துக்களை மீட்டு வருகிறது. தற்போது இதன் தலைவராக பஞ்சாப்பைச் சேர்ந்த விஜயேந்திர சிங் உள்ளார். தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கான பொறுப்பாளராக நிதின் கும்பல்கர் உள்ளார். தமிழகத்திலும் கடந்த 2017-ம் ஆண்டு சொத்து மீட்புக்குழு, ஜெ.எம்.ஆருண் தலைமையில் அமைக்கப்பட்டது. தற்போது இதன் தலைவராக முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளார். சொத்து மீட்புக்குழுவின் தமிழக பொறுப்பாளர் நிதின் கும்பல்கர் அண்மையில் தமிழகம் வந்து கடலூர் மற்றும் ஆம்பூரில் ஆய்வு செய்தபோது, காங்கிரஸின் சொத்துகளை தமாகாவினர் நிர்வகித்து வருவது தெரிய வந்தது. அதனை மீட்கும் நடவடிக்கையில் குழு ஈடுபட்டுள்ளது.இதுதொடர்பாக சொத்து மீட்புக் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில், ஆம்பூர் மற்றும் கடலூரில் மாவட்ட காங்கிரஸ் பெயரில்தான் சொத்து வாங்கப்பட்டுள்ளது. அதை வேறு கட்சியினர் பயன்படுத்த முடியாது. ஏற்கெனவே வேலூரில் அப்படி காங்கிரஸ் சொத்து தமாகவினரிடம் இருந்தது. நீதிமன்ற வழக்கு மூலம் அந்த சொத்து மீட்கப்பட்டது. அதேபோல, ஆம்பூர், கடலூரில் உள்ள இடங்களை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.
Comments are closed.