Rock Fort Times
Online News

ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு: வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு கிராமத்தில் காவல் நிலையம் அருகே உள்ள நிலத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் மற்றும் அண்ணா கைப்பந்து கழக விளையாட்டுத் திடல் உள்ளது. இந்த கோவிலில் ஒரு தரப்பில் பொங்கல் வைக்க தயாரான போது கைப்பந்து கழகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே, இந்த இடம் தொடர்பாக இரு தரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் பொங்கல் வைப்பது தொடர்பாக மீண்டும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க வருவாய் துறையினர் மூலம் சமாதானம் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது வழக்கு நிலுவையில் உள்ளதால், இரு தரப்பினரும் கோவிலில் நுழையத் தடை விதிக்கப்பட்டது. அப்போது வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். அண்மையில் இதே பிரச்சனை மீண்டும் எழுந்தது. அப்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன .இதனைத் தொடர்ந்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் இங்கே இருந்தால் மேலும் பிரச்சனை ஏற்படும் என பொதுமக்கள் புகார் கூறினர். அப்போது, டிஐஜி வருண்குமார் வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம், எங்கே போனாலும் சரியா இருக்க மாட்டீர்களா? ஏதாவது பிரச்சனை தானா..?” என்று கடிந்து கொண்டதோடு அருகில் இருந்த டிஎஸ்பியிடமும் சரியாக பணி செய்யுங்கள் என்று கூறிச் சென்றார். இந்தநிலையில் வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்