திருச்சி அருகே ஹெல்மெட்டால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு- உறவினர்கள் சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் வசித்து வருபவர் ரகுநாத் (40). இவர் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜீவா (35). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு இறைச்சி எடுத்து கொடுத்துவிட்டு வீட்டில் சமைக்க கூறிவிட்டு ரகுநாத் கடைவீதிக்கு சென்றார். இதற்கிடையில் அவர்களது வீட்டின் அருகில் வைக்கப்பட்டிருந்த கல் ஒன்றை பக்கத்து வீட்டு பெண்ணான மாலதி எடுத்து பயன்படுத்தி உள்ளார். இது தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து புகார் அளிப்பதற்காக மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு ஜீவா மற்றும் அவரது கணவர் ரகுநாத், அத்தாணி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மாலதியின் மகன் வசந்தகுமார் மற்றும் மதுக்குமார் இருவரும் அவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . வாக்குவாதம் முற்றியதில் ஹெல்மெட்டால் ஜீவா மற்றும் அவரது கணவர் ரகுநாத்தை தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜீவா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த அவர், தனக்கு தலைவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் இருப்பதாக கூறியதால் அவரது தாயார் வீடான குளித்தலை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு நன்றாக பேசிக் கொண்டிருந்த ஜீவா திடீரென மயங்கி விழுந்து சுயநினைவின்றி கிடந்தார். உறவினர்கள் ஜீவாவை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் உடற்கூறு ஆய்வு முடிந்து அவரது உடலை இன்று(05-02-2025) அவரது கணவரின் வீட்டிற்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெண்ணின் இறப்பிற்கு உரிய நியாயம் வேண்டும் என திருச்சி- மண்ணச்சநல்லூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் மற்றும் வட்டாட்சியர் பழனிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர்.
Comments are closed.