Rock Fort Times
Online News

திருச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்டது வலுவிழந்த பாலம்..!- மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் கடமைக்கு ஆய்வு செய்த அதிகாரிகளால் கிராமத்தினர் ஆத்திரம்…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ளது தாளக்குடி கிராமம். இக்கிராமத்தையும் கொள்ளிடம் ஆற்றங்கரையையும் இணைக்கும் வகையில் அய்யன் வாய்க்கால் குறுக்கே கடந்த 35 வருடங்களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இதன் மூலம் அருகே உள்ள விவசாய நிலத்திற்கும், இடுகாட்டிற்கும் செல்வதற்கு கிராம மக்கள் இதை பயன்படுத்தி வந்தனர்.கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் கடந்த சில வருடங்களுக்கு முன்பே இப்பாலம் தனது வலுத்தன்மையை இழந்தது. எனவே இப்பகுதியில் புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் டெல்டா பாசனத்திற்காக முக்கொம்புவிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இப்பகுதி வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது.அதிக நீர்வரத்து காரணமாக ஏற்கனவே வலுவிழந்து காணப்பட்ட பாலம் இடிந்து கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் உடைந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் பாலத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரி ஒருவர் இப்போதுதான் நாங்கள் பாலத்தை பார்வையிட்டுள்ளோம். அடுத்து பொறியாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய ஆணை வந்த பிறகே பாலம் குறித்த அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படும் என மெத்தனமாக கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கூட கேட்காமல் லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். அரசு பணி என்பது மக்களுக்கு சேவையாற்றவே என்பதை மறந்து கடமைக்கு வந்து சென்ற அரசு அதிகாரிகள் மீது கிராம பொதுமக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்