Rock Fort Times
Online News

ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் ஊர்ந்துவரும் வாகனம்: திருச்சியில் விஜய் பேசுவதில் சிக்கல்…!

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் இப்போதே தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மக்களை கவர வியூகம் வகுத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய சூழலில் நடிகர் விஜயின் அரசியல் வருகை அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மாநாடுகளை நடத்தி தனது கொள்கைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும் மக்களிடம் கூறி வந்த நடிகர் விஜய், அடுத்த கட்டமாக தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தையும் தொடங்கி விட்டார். அதன்படி த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று( செப்.13) தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனிக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட விஜய்க்கு திருச்சியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே அவர் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்கிறார். பிரசார வாகனம் செல்ல முடியாத வகையில் கூட்ட நெரிசல் சூழ்ந்துள்ளதால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விஜய் பேசுவதில் சிக்கல் எழுந்துள்ளது. விஜய் வரும் வழியெங்கும் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். வழியெங்கும் சூழ்ந்துள்ள தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி விஜய் உற்சாகத்துடன் வந்தார். திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பேசுவதற்கு 10.30 முதல் 11 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஆனால் மரக்கடை பகுதிக்கு வர மதியம் 12 மணியை கடந்தும் விஜய் வரவில்லை. இதனால் அவர் பேசுவதற்கு அனுமதி கிடைக்குமா? என்று தெரியவில்லை.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்