திருச்சி தென்னூர் பட்டாபிராமன் தெருவை சேர்ந்தவர் சந்துமுகமது (வயது 62). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த பல்கீஸ்பானு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்தனர். இதற்கான வழக்கு பொள்ளாச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே சந்து முகமதுவை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சந்துமுகமது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசில் சந்து முகமது புகார் கொடுத்துள்ளார். அதில், தன்னுடைய இரண்டாவது மனைவி பல்கீஸ் பானு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை காரில் கடத்தி தாக்கியதாக தெரிவித்துள்ளார். புகாரின்பேரில், போலீசார் பல்கீஸ் பானு உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.