Rock Fort Times
Online News

திருச்சி போலீஸ் ஏ.சி.க்கும், ஜீப் டிரைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம்:வைரலாகும் வீடியோ…!* முதல்வர் மு.க.ஸ்டாலின், கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நடவடிக்கை எடுப்பார்களா? (வீடியோ இணைப்பு)

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறை என்பது இதுவரை எட்டா கனியாகத்தான் இருந்து வருகிறது. அதேபோல காவலர்களின் வீட்டு விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு கூட செல்ல முடியாத நிலையில்தான் பணியாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில்கூட சில காவல்துறை உயர்அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் காவலர்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும், ஒருமையில் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வலம் வருவதுண்டு. இதனால், அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனை அறிந்த திருச்சி மாவட்ட காவல் ஆணையர் ந.காமினி ஐ.பி.எஸ்., சமீபத்தில் போலீசாருக்கு கட்டாயம் வார விடுமுறை அளிக்க வேண்டும், இதனை தனது அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்தநிலையில் திருச்சி மாநகர காவல்துறை கண்டோன்மென்ட் சரக உதவி ஆணையராக பணியாற்றும் ஜான் கென்னடி என்பவர் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இரவு ரோந்து பணியின்போது தனக்கு கீழ் பணியாற்றும் ஜீப் டிரைவர் ஒருவரை தூங்கியதாக கூறி அவரை நிற்க வைத்து வசைபாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுவும் நேற்று சுதந்திர தின நாளில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல மேலதிகாரி ஒருவர் தனக்கு கீழ் பணியாற்றும் காவலர் ஒருவரை வசை பாடுவது தமிழ்நாடு முழுவதும் காவல்துறை வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினர் தங்களது குடும்பத்தினர், குழந்தைகளை மறந்து எந்நேரமும் காவல் பணி செய்வதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இது போதாது என்று மேல் அதிகாரிகள் இதுபோல “மெண்டல் டார்ச்சர்” செய்வது அவர்களை மேலும் மன உளைச்சலுக்கு தள்ளி உள்ளது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறுகையில்,
உதவி ஆணையர் ஜான் கென்னடி மீது இதுபோல பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அவர், காவல் ஆய்வாளராக பணிபுரிந்தார். பின்னர் மதுரை மாவட்டத்தில் உதவி ஆணையராக கட்டுப்பாட்டு அறையில் பணி செய்தார். அப்போது தொலைபேசி மூலம் பல ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு தனக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தரவும், வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி தரவும் கேட்டு மிரட்டி வந்துள்ளார். அங்கு அவர் மீது இதேபோல பல குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அங்கிருந்து அவர் திருச்சி மாநகர் குற்றப்பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டார். இங்கும் அவர் தனக்கு கீழ் பணியாற்றும் காவலர்களை தனக்கு தேவையான பொருட்களை வாங்கி வர வற்புறுத்துவது, காவல் நிலையத்திலோ, கட்டுப்பாட்டு அறையிலோ அதிகாலை 3 மணி அளவில் தூங்கும் பெண் போலீசாரை வீடியோ எடுத்து மிரட்டுவது போன்ற பல காரியங்களை செய்து வருகிறார். தற்போது பகல் பணி செய்துவிட்டு இரவு பணியில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர் தூங்கியதை வீடியோ எடுத்து அவரை மிரட்டி உள்ளார் என்று தெரிவித்தனர். காவல்துறையினருக்கு இதுபோன்று மெண்டல் டார்ச்சர் கொடுப்பதால் அவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் வேறு முடிவுகளுக்கு தள்ளப்படுவதாகவும் அவர்களுக்கு நல்லதொரு, நியாயமான முடிவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் எடுக்க வேண்டுமென காவல்துறையில் பணியாற்றுபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்