திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மைய ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பழனிவேல் மற்றும் சிவசங்கரி தம்பதியின் மூன்று வயது மகள் லியா லட்சுமி, விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாள்.வழக்கம்போல பள்ளி சென்ற சிறுமி லியா லட்சுமி, இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்கு சென்றாள். ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுமி வகுப்பறைக்கு திரும்பவில்லை. இதனால், அவரது வகுப்பு ஆசிரியர் சிறுமியை தேடிச் சென்றுள்ளார். ஆனால், கழிவறையில் சிறுமி இல்லை. இதனால் பள்ளி முழுவதும் சிறுமியை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த மற்ற ஆசிரியர்களும் சிறுமியை தேடியுள்ளனர். அப்போது திறந்து கிடந்த செப்டிக் டேங்க்-ல் சிறுமி விழுந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், விக்கிரவாண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சற்று நேரத்தில் சிறுமி மீட்கப்பட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால், சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி இறந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தங்களது குழந்தை இறந்த தகவல் அறிந்த பெற்றோர் கதறி அழுதனர். சிறுமி இறந்த தகவல் அறிந்த சில பெற்றோர்கள் பள்ளி வளாகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில பெற்றோர்கள் பள்ளி வாயில் முன்பாக விழுப்புரம்-சென்னை செல்லும் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் ,மறியலை கைவிட்ட உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.அன்னியூர் சிவா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்நிலையில் குழந்தையின் தந்தை பழனிவேல், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கரதையாக இருப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் மூவரையும் நள்ளிரவு 2 மணிக்கு கைது செய்து விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உடல் இன்று(04-01-2025) காலை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அசம்பாவிதம் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பள்ளி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments are closed.