அ.தி.மு.க., உட்கட்சி பிரச்சனையை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. வழக்கு தொடர்ந்தார். அதன்படி இடைக்கால தடை உத்தரவை ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பி.ரவிந்தரநாத் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில், நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (12-02-2025) தீர்ப்பு அளித்தது. அ.தி.மு.க., உட்கட்சி பிரச்சனையை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என இ.பி.எஸ்., தரப்பு வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தலாம். சட்டப்படி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கூறி,ஏற்கனவே தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பின் எதிரொலியாக, இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ்.,க்கு தரக்கூடாது என்று வலியுறுத்தி தரப்பட்டுள்ள மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இ.பி.எஸ்.,க்கு கட்சிக்குள் நெருக்கடி உருவாகும். ஏற்கனவே கட்சிக்குள் செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் இ.பி.எஸ்.,க்கு எதிராக பேச தொடங்கியுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
Comments are closed.