ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று( ஜூன் 9) ஏராளமான பொதுமக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது திருச்சி பெரிய கடைவீதி பகுதியில் வாடகைக்கு செயல்பட்டு வந்த எம்.கே.ஜி.ராஜா என்பவரது கடையில் ஒரு ரவுடி அத்துமீறி நுழைந்து பொருட்களை திருடிச் சென்றதாகவும், இதுதொடர்பாக புகார் அளித்த தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, தனது கடையில் திருடப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்கவும், சம்பந்தப்பட்ட ரவுடி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் எம்.கே.ஜி.ராஜா தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்தார். இதை கவனித்த தீயணைப்பு துறையினர் அந்த பெட்ரோல் கேனை பறித்தனர். இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தம்பதியினர் இருவரிடமும் அறிவுரை கூறி இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன்பேரில் தம்பதியினர் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.