வருகிற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி தான் அமையும்…* திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் டி.வி.கணேஷ் இல்ல திருமண விழா திருச்சியில் இன்று (27-08-2025) நடைபெற்றது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேமுதிக சார்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ மற்றும் ‘மக்களை தேடி மக்கள் தலைவர்’ ரத யாத்திரை தொடங்கியுள்ளோம். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை காண முடிந்தது. இரண்டாவது கட்டமாக வருகிற செப்டம்பர் ஐந்தாம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை தேமுதிக வரவேற்கிறது. அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் போது அது நாட்டுக்கும், மக்களுக்கும் இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் வேறு எங்களது பயணம் வேறு. நாங்கள் காலையில் பூத் கமிட்டி மற்றும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கிறோம். மாலையில் ரத யாத்திரை நடத்துகிறோம். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி தான் அமையும். யாருடன் கூட்டணி என்பதை வருகிற ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம். புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு பின்னர் மக்கள் தலைவராக திகழ்ந்தவர் விஜயகாந்த் தான். அரசியல் கட்சி தலைவர்களாக இருந்தாலும் சரி, மக்களாக இருந்தாலும் அவரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. விஜய் கட்சி மாநாட்டில் ரேம்ப் வாக்கில் குதித்து ஏறும்போது பவுன்சர்கள் தொண்டர்களை தள்ளி விட்டது எல்லாக் கட்சியிலும் நடப்பது தான். திட்டமிட்டு யாரும் செய்வதில்லை. காவல்துறைக்கு அடையாளமாக திகழ்ந்தவர் கேப்டன். இன்றைக்கு தேமுதிக கொடி, ப்ளெக்ஸ் வைக்க அனுமதி மறுத்ததாக மாவட்ட செயலாளர் கூறினார். அனுமதி கொடுத்தால் எல்லோருக்கும் அனுமதி கொடுங்கள்.இல்லை என்றால் யாருக்கும் அனுமதி கொடுக்காதீர்கள்.
திரை உலகில் 50 ஆண்டுகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார். அவருக்கு முதல் ஆளாக நானும், தேமுதிகவும் வாழ்த்து தெரிவித்தோம். 50 ஆண்டுகள் கதாநாயகனாக நடிப்பது இந்தியாவில் எங்கும் நடக்கவில்லை. கேப்டன் இருந்திருந்தால் ரஜினிகாந்த்க்கு விழா எடுத்திருப்பார். நடிகர் சங்கமோ, அதன் நிர்வாகிகளோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கழக பொருளாளர் எல்.கே.சுதீஷ், கழக துணைச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ எஸ்.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர்கள் டி.வி.கணேஷ், சன்னாசிப்பட்டி பாரதிதாசன், கே.எஸ்.குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.