தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கார்த்திக் (35), தங்கம் மகன் சதீஷ்(29), செல்வராஜ் மகன் பாலசுப்பிரமணியன்(30) மற்றும் அருப்புக்கோட்டை வேல்முருகன் மகன் கார்த்திகைசெல்வன்(25) ஆகியோர் ஒரு காரில் சதுரகிரிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். காரை கார்த்திக் ஓட்டியுள்ளார். அந்த கார் இன்று( டிச.18) அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வழியாக சென்ற போது அம்புலி ஆற்றுப் பாலம் அருகில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வேப்பமரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் காருக்கு அடியில் நான்கு பேரும் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் ஓடி வந்து காருக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் காரை நிமிர்த்த முடியவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரமங்கலம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரகாஷ், பிரபு ஆகியோர் கயிற்றை எடுத்து காரில் கட்டி அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் மீட்க முயன்றனர். அவ்வாறு செய்தும் நிமிர்த்த முடியவில்லை. அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் உதவியுடன் கார் நிமிர்த்தபட்ட பிறகு காரில் சிக்கி இருந்த 4 பேரையும் காயங்களுடன் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கார் மரத்தில் மோதியதும் உயிர் பாதுகாப்பு பலூன்கள் ஓபன் ஆனதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.