இயக்குநர் வெற்றி மாறனின் பிறந்த நாள் கொண்டாட்ட விடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை-2 திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சிலம்பரசனைக் கதாநாயகனாக வைத்து அரசன் என்கிற கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வடசென்னை திரைப்பட உலகுடன் தொடர்புடைய கதையாக உருவாகி வருவதால் பலரும் எப்போது வெளியாகும் எனக் காத்திருக்கின்றனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக அண்மையில் பேசிய சிலம்பரசன் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருமெனக் கூறியுள்ளார். அதே நேரம், அரசனுடன் இயக்குநர் வெற்றி மாறன், ராஜன் வகையறா என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதில், நடிகர் கென் நாயகனாக நடிக்கிறார். ஒரே நேரத்தில் இரு திரைப்படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் தன் 51-வது பிறந்த நாளை நேற்று (செப்.4) சென்னையிலுள்ள அவரது அலுவலகத்தில் கொண்டாடினார். ஆனால், சர்ச்சையை ஏற்படுத்து வகையில் சிலர் வெற்றி மாறனுக்கு மிகப்பெரிய மாலை அணிவித்து கையில் வாளைக் கொடுத்தனர். அதனை வெற்றி மாறன் பெற்றுக்கொண்டு சிரித்தார். அவருடன் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சில குழந்தைகளும் வாளைக் கையில் எடுத்ததை வியப்புடன் பார்த்தனர். அதிகாரத்திற்கு எதிராகத் தொடர்ந்து திரைப்படங்களை எடுக்கும் சமூகப் புரிதல் கொண்ட இயக்குநர் வெற்றி மாறன் குழந்தைகள் முன்னிலையில் இப்படி வாளைப் பெற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.